மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட பரிதாபம்! மூச்சு திணறியதால் பரபரப்பு!

மாணவர்களை ஆணியில் தொங்கவிட்ட பரிதாபம்! மூச்சு திணறியதால் பரபரப்பு!

 ம.டெல்லிபாபு,

 மாணவர்களை சட்டையுடன் ஆணியில் தொங்கவிட்ட சம்பவத்தில் போலிசார் தலையிட்டு விசாரணை நடத்தினார்கள். நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக பட்டியலின மாணவனை வீடு புகுந்த சக பள்ளி மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக, தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்டியலின மாணவனை சக மாணவன் ஆள் வைத்து அடித்த சம்பவம் நிகழ்ந்தது.

 அதற்குள் சேலத்தில் நேற்று மற்றொரு கொடுமை நடந்துள்ளது. சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 9-ம் படிக்கும் மாணவர்கள் சிலர் 6-ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடம் தொடர்ந்து வம்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

 இரு தினங்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்

5 பேரையும் ஒருமையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர்கள் அவமானம் அடைந்துள்ளனர். அனைவருக்கும் முன்பு தங்களை ஒருமையில் பேசிய அந்த மாணவர்களை பழிவாங்க அவர்கள் முடிவு செய்து, சம்பவதன்று   மாலை பள்ளி முடிந்ததும் அந்த 2 மாணவர்களை 9-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் சேர்ந்து இழுத்து வந்து தாக்கியுள்ளனர். பின்னர் தங்கள் வகுப்பில் அறையப்பட்டிருந்த ஆணியில் ஒரு மாணவனை சட்டையோடு தொங்கவிட்டனர்.

 மற்றொரு மாணவனை வகுப்பறை கதவில் தொங்கவிட்டு சென்றனர். இதில் மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி ஊழியர்கள் அவர்களை மீட்டனர். இதில் ஒரு மாணவனுக்கு சட்டை கழுத்தில் இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

 இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.