கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்!

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்!

உ.சசிகுமார்,

 இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாட்டில் வாழும் கோடிகணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெருத்த ஏமாற்றத்தை அளித்தனர். உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி.

 அந்த அணி 1987, 1999, 2003, 2007, 2015-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டம் வென்றது நினைவு கூறத்தக்கதாகும்.

    ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த மைதானத்தில், ஏற்கனவே இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, 2 முறை சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது.   

 டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 240 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தொடக்கத்தில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய நிலையில் ஷுப்மன் கில் ஏமாற்றம் அளித்தார். ரன் சேர்க்க தடுமாறிய அவர், 7 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தை மிட் ஆன் திசையில் விளாச முயன்ற போது ஆடம் ஸம்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 ஆனால் ரோஹித் சர்மா 31 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் பந்தில் டிராவிஸ் ஹெட்டின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக இது அமைந்தது. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 9.4 ஓவர்களில் 76 ஆக இருந்தது. ரோஹித் சர்மா அமைத்துக்கொடுத்து வலுவான தொடக்கத்தை இந்திய அணியின் நடுவரிசை வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளத் தவறினர்.

 குறிப்பாக ஸ்ரேயஸ் ஐயர் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பேக் ஆஃப் லென்ந்த் பந்தில் எளிதாக விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலிஷிடம் பிடிகொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து விராட் கோலியுடன் கே.எல்.ராகுல் இணைந்தார். இந்த ஜோடி ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 97 பந்துகளில் இந்த ஜோடி ஒரு பவுண்டரியை கூட அடிக்கவில்லை.

10-வது ஓவரின் கடைசி பந்தில் அடித்த பவுண்டரிக்கு பின்னர் மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரின் 2-வது பந்தில்தான் பவுண்டரி அடிக்கப்பட்டது. இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 16 முதல் 26 வரையிலான 11 ஓவர்களில் பந்து வீச்சில் 8 மாற்றங்களை செய்து இந்திய பேட்ஸ்மேன்களை ரன்கள் குவிக்கவிடாமல் பார்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

  கே.எல்.ராகுலுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் உடலை குறி வைத்தே வீசினார்கள். இதனால் அவர், ரன்கள் சேர்க்க சிரமப்பட்டார். போதாத குறைக்கு ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சையும் கையாண்டு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கடும் அச்சுறுத்தல் கொடுத்தனர்.

 மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த விராட் கோலி 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்தை தடுப்பாட்டம் ஆட முயன்றபோது பந்து மட்டையின் உள்பகுதியில் பட்டு போல்டானார். இதன் பின்னர் ஜடேஜா 9 ரன்களில் ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் வெளியேறினார். பயந்து பயந்து விளையாடிய கே.எல்.ராகுல் 107 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார்.   

 முகமது ஷமி 6, ஜஸ்பிரீத் பும்ரா 1, பார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவ் 18, குல்தீப் யாதவ் 10 ரன்களில்  அவுட் ஆனார்கள்

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஸம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

   241 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 7 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் சேர்த்து சற்று தடுமாறியது. டேவிட் வார்னர் 7 ரன்னில் முகமது ஷமி பந்திலும், மிட்செல் மார்ஷ் (15), ஸ்டீவ் ஸ்மித் (4) ஆகியோர் ஜஸ்பிரீத் பும்ரா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஆனால் 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்னஷ் லபுஷேன் ஒருமுனையில் நிதானமாக விளையாட மறுமுனையில் தொடக்க வீரரான டிராவிஸ் ரன் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

 செமையாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 120 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 137 ரன்கள் விளாசினார். வெற்றிக்கு இரு ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஹெட் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் 2 ரன்கள் சேர்க்க 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

 ஆட்ட நாயகனாக டிராவிஸ் ஹெட் தேர்வானார். தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வானார். பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் கூட்டாக கோப்பையை வழங்கினர்.

  சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையுடன் ரூ.33 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த இந்திய அணி ரூ.16.50 கோடியை பெற்றது. லீக் சுற்றில் 10 ஆட்டங்களிலும் மட்டை வீச்சு, பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறையிலும் அமர்க்களப்படுத்திய இந்திய அணி இம்முறை எப்படியும் கோப்பையை வென்றுவிடும் என கோடிக் கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் 3-வது முறையாக கோப்பையை வெல்லும் இந்திய அணியின் கனவை ஆஸ்திரேலிய அணி தகர்த்தது.

 குறிப்பு:- வீராட் கோலி 100 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே பாடுபட்டு விளையாடியது இந்த தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வீராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா கட்டித்தழுவி ஆறுதல் படுத்தினார்.