அதிமுக தலைமைகழகத்தின் 113 ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பினரிடமிருந்து மீட்பு! சிபிசிஐடி தகவல்!!

ம.பா.கெஜராஜ்,
அ.தி.மு.க. தலைமைகழகத்தின் 113 ஆவணங்கள்ளை ஓபிஎஸ் தரப்பினரிடமிருந்து மீட்டதாக சிபிசிஐடி வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது. அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியாக கட்சி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து அதிரடியாக அவர்கள் உள்ளே புகுந்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் - கலவரம் வெடித்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். மயிலாப்பூர் தாசில்தார் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு தகவல்களை சேகரித்தனர். அதிமுக அலுவலக கலவர வழக்கில் காணாமல் போன அனைத்து 113 ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியிருக்கிறார்கள்.