இந்திராகாந்தி... ஜே.ஆர்.டி டாடாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம்!

ம.பா.கெஜராஜ்,
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் 18,000/-கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து மீட்டுள்ளனர்.
இந்நிலையில் மீட்டுள்ளனர் என்பதம் அர்த்தம் குறித்து பல்வேறு செய்திகள் நேற்றும், இன்றும் வெளியாகி வருகிறது.
அதில் முக்கியமானது என்னவெனில்,1953 ஆம் ஆண்டு டாடா குழுமத்துக்கு சொந்தமானதாகவே ஏர் இந்தியா இருந்தது.
இந்நிலையில், 14. பிப்ரவரி 1978-ல் எவ்வித முன்னறிவிப்பின்றி ஜே.ஆர்.டி டாடா ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது மொரார்ஜி தேசாய் அரசு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அதே ஆண்டுடில் ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜே..ஆர்.டி டாடாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இந்திரா காந்தி அந்த கடிதத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்.
நீங்கள் ஏர் இந்தியாவுடன் தற்போது இல்லை என்பது எனக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது.
நீங்கள் வருத்தமாக இருப்பதைப் போலவே உங்களைப் பிரிந்து ஏர் இந்தியா நிறுவனமும் வருத்தத்தில் இருக்கும். நீங்கள் அந்த நிறுவனத்தின் தலைவராக மட்டும் இல்லை. நிறுவனராகவும், தனிப்பட்ட வகையில் ஆழமான அக்கறையுடன் அதை வளர்த்தவராகவும் இருந்தீர்கள் என்று இந்திரா காந்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அலங்காரம் மற்றும் ஏர்ஹோஸ்டஸ்களின் சேலைகள் உள்ளிட்ட சிறிய விவரங்களுக்கு கூட ஜே.ஆர்.டி டாடா நுணுக்கமாக கவனம் அளித்தது ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச நிலைக்கும் உயர்த்தியதாக இந்திராகாந்தி அந்த கடிதத்தில் பாராட்டியுள்ளார்.
உங்களைப் பற்றியும் ஏர் இந்தியா நிறுவனம் பற்றியும் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த திருப்தியை உங்களிடம் இருந்து யாராலும் எடுக்க முடியாது. அரசாங்கம் உங்களுக்கு பட்டிருக்கும் கடனை சிறுமைப்படுத்த முடியாது என்று இந்திரா காந்தி அந்த கடிதத்தில் மனதார தெரிவித்துள்ளார்.
நம் இருவருக்குள்ளும் சில புரிதலின்மைகள் இருந்தன. நான் செயல்பட வேண்டியிருந்த அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தில் இருந்த எதிர்ப்புகள் ஆகியவற்றை உங்களிடம் வெளிப்படுத்த என்னால் இயலவில்லை.
இதற்கு மேல் நான் எதுவும் கூற விரும்பவில்லை என்று இந்திரா காந்தி அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.
ஜே.ஆர்.டி டாடா இந்திராகாந்திக்கு எழுதிய பதில் கடிதம்
ஏர் இந்தியா நிறுவனத்துடன் தமக்கிருந்த தொடர்புக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்தது குறித்து இந்திரா காந்தி கடிதம் எழுதியதற்கு பிப்ரவரி 28ஆம் தேதி ஜே.ஆர்.டி டாடா இந்திரா காந்திக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தாம் ஆற்றிய பங்கு குறித்து இந்திராகாந்தி எழுதியுள்ளது தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அந்த பதில் கடிதத்தில் தெரிவித்திருந்தார் ஜே.ஆர்.டி டாடா.
தமது சகாக்கள் மற்றும் ஊழியர்களின் விசுவாசம் மற்றும் உற்சாகம், அரசு அளித்த ஆதரவு ஆகியவை இன்றி தம்மால் எதையும் சாதித்திருக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம் வந்தாலும் பழைய நினைவுகளை அசைபோட்டுபார்க்காமல் இருக்க முடியாது அல்லவா? ஏனெனில் அவை இனிமையானவை ஆகுமே.