ஜன 24 முதல் பிப் 5 வரை அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு!

ஜி.சாந்தகுமார்,
திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், தற்போது ஜன-24 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட தினங்களில் அண்ணா அறிவாலயம் பரபரப்பாக காணப்படும்.
அதற்கென அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் முதன்மை செயலாளர், அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்திப்பு கீழ்க்கண்ட அட்டவணைப்படி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.
வரும் 24ம் தேதி மாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், 27-ம் தேதி காலை 9 மணிக்கு பொள்ளாச்சி, கோவை, மாலை 3 மணிக்கு நீலகிரி, திருப்பூர், 28-ம் தேதி காலை 9 மணியளவில் நாமக்கல், ஈரோடு, மாலை 3 மணிக்கு சேலம், தருமபுரி, 29-ம் தேதி காலை 9 மணிக்கு சிவகங்கை, விருதுநகர், மாலை 3 மணிக்கு தென்காசி, நெல்லை, 30-ம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, மாலை 3 மணிக்கு மதுரை, தேனி, 31-ம் தேதி காலை 9 மணிக்கு ராமநாதபுரம், கடலூர், நாடாளுமன்ற தொகுதிக்கும் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும்
பிப்ரவரி 1-ம் தேதி காலை 9 மணிக்கு சிதம்பரம், மயிலாடுதுறை, மாலை 3 மணிக்கு நாகப்பட்டினம், தஞ்சாவூர், 2-ம் தேதி காலை 9 மணிக்கு வேலூர், அரக்கோணம், மாலை 3 மணிக்கு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 3-ம் தேதி காலை 10 மணிக்கு வடசென்னை, தென்சென்னை, மாலை 3 மணிக்கு மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், 4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை, ஆரணி, மாலை 3 மணிக்கு பெரம்பலூர், திருச்சி, 5-ம் தேதி காலை 9 மணிக்கு கரூர், திண்டுக்கல், மாலை 3 மணிக்கு காஞ்சிபுரம், புதுச்சேரி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.