பட்டாசு சத்தம் மேலதாளம்... கலைகட்டும் அண்ணா அறிவாலயம்!

ம.பா.கெஜராஜ்,
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை நிலவரம் மற்றும் பிரதமர் மோடி பின்னடைவு என்று தகவல் வெளியானதும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதியில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தியா அளவில் காங்கிரஸ் கூட்டணியும் பாஜக கூட்டினியினரும் இருவரை இருவர் முன்னிலை படுத்தி வருகின்றனர்.
கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 248 இடங்களிலும், பாஜக கூட்டணி 224 இடங்களில் முன்னிலை வகிக்கிறது .
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகிக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில் பின்னடைவை சந்தித்துள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 27,525 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 20,226 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 10,747 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இந்த தகவல்களை தொலைக்காட்சியில் பார்த்த திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடி வருகின்றனர்.